-
29th September 2012, 10:34 AM
#1
Senior Member
Senior Hubber
Mrs. Padmavathi ( sister of Ilayaraaja ) writes about him
பண்ணைப்புரம் என்ற பெயர் வரக்காரணம்...
வானம் பார்த்து வழிகாட்டிய பூமி,
வாழவைக்கும் வளம்மிக்க பூமி.
தெய்வங்கள் விரும்பும் பூமி,
தெய்வீகம் நிலைபெற்ற பூமி,
பண்ணைப்புரம் என்று இந்த இடத்திற்கு பெயர் வருவதற்கு முன் இந்த இடத்தில் வாழ்க்கை நடத்துவதற்க்காக வந்தவர்கள் "பண்பாளர்களான பாவலர்கள்".
இந்த கிராமத்தைச்சுற்றிலும் நாலாபுறங்களிலும் கேரளத்தின் மலைதொடற்சிகளுடன் மலைகள் உயர்ந்து நின்று கூர்மைகளுடன் தன் மனங்களிலுள்ள
உயர்ந்த குணங்களை காட்டுவதைப்போல அந்த கிராமத்தின் அழகை மெருகுகள் ஏற்றும்படி வெளியில் காட்சி தந்து கொண்டு இருந்தன பசுமைகளுடன்.
மலையின் அடித்தளங்களில் நின்ற மரங்கள், படர்ந்த கிளைகளோடும், பொலிவோடும் வெளியில் தங்களின் செழிமைகளைக்காட்டி அங்கே சுதந்திரமாக
பறந்து வரும் பறவை இனங்களுக்கெல்லாம், எல்லோருமே இங்கே வந்து எங்களது மரக்கிளைகளில், கூடு கட்டி குடியிருங்கள், எங்களிடங்களில் இன
வேறுபாடுகள் கிடையாது என்று பாராபட்சங்களின்றி கூறுவதைப்போல, அங்கே வளர்ந்த மரங்களுடைய கிளைகள் காட்சி தந்து பறவைகளுக்கு இடம் தந்தன.
மலைகளின் கீழே வளர்ந்த மரங்களின் நிழல்களில் வளர்ந்த செடிகளும்,அதனடியில் வளர்ந்த கொடிகளும்,பந்தங்களையும் பாசங்களையும் எங்களின் பிணைப்புதனைப்
பார்த்த பின்தான் நீங்கள் கற்றுக்கொள்வதற்கு தெரிந்து கொள்ளவேண்டும் என்பதைப்போல், அங்கே வளர்ந்துள்ள செடிகளுடன் கொடிகள் பின்னிப்பிணைந்து,
மரங்களின்மீது தாவி வளர்ந்துகொண்டு, பந்தபாச உணர்வுகளைக்காட்டுவதைப்போல் மிகச்செழிமைகள் நிறைந்து வான வெளிகளுக்கு காட்சி தந்து கொண்டு இருந்தன
இயற்கையின் வளங்கள்.
இதனைக்கண்ட வானமேக மண்டலங்கலோ, தன் பருவகாலத்தில் உதயமான கடமைகளின் உணர்வுகளுடன், எதையும் மறந்திடாது, யாரிடங்களிலிருந்துமே எந்தவித
பிரதியுபகாரங்களையுமே எதிர் பார்த்திடாமல், பருவகால மழை மாரியாகி வந்து, பூமியின் மீது பூமாரிப் பொழிந்து, அந்த பண்ணிசைத்துப்பாடும் பண் பாளர்களுக்கு
அக்கிராமத்தில் பாலூத்து என்று பெயர் விழங்கும்படி நீரூத்துக்கள், மேலே மலைமீதிருந்து கீழ்நோக்கி விழுந்தோடிக்கொண்டிருந்தன.
நீரோட்டங்கள் பள்ளங்களைப் பார்த்து ஓடி வந்து, எங்களை ஏற்றத் தாழ்வு என்ற எண்ணங்கள் நெருங்கிடவோ, அணுகிடவோ இயலாது என்பதைப்போல, அந்த இடங்களில்
ஓடைகளிலும், மலை மேலிருந்து விழும் நீரோட்டங்கள் கூறிடாது கூறி செயல்கள் மூலமாக காட்சியளித்துக்கொண்டிருந்தன.
அத்தனை செழிமைகளும் இயற்கையின் வளங்களுடன் அங்கே வாழ்கின்ற இனங்களுக்கு புத்தி புகட்டுவதைப்போல் பெருமையுடன் இருந்தது. அத்தனை இயற்கையின்
அழகும் சேர்ந்து கொண்டு அந்த சின்னஞ்சிறிய கிராமத்திற்கு ஆடை ஆபரணங்களை போலவே அழகுகளை மெருகேற்றி காட்டியது. அக்கிராமத்தின் மீது விழுந்த
சூரிய ஒளி மென்மேலும் அழகுடன் விளங்கச் செய்தன. இரவு நேரங்களில் விழும் சந்திர வெளிச்சங்கள் குளுமைதனைக்காட்டி, அங்கே வாழும் மனிதர்களுடைய மனங்களைப்
பசுமைகளாக்கச் செய்தன.
கிராமங்களைச் சுற்றிலுமுள்ள இயற்கையின் வளங்கள் பகட்டான வாழ்வையோ,படாடோப அடம்பரங்களையோ, யாரையுமே எதிர்பார்க்கவிடாமல் மிகதெழிவான
தெய்வ கடாஷியங்கள் நிரந்த வளமிக்க பூமியாக இருந்தன. அங்கே முதன்முதலாக வாழ்ந்தவர்கள் பண்பாடும் பாவலர்கள்தான். பாடுவதற்காக என்று பயிற்சிகளே பயிலாத
பாடகர்கள்,பாட பிறந்தவர்கள், சங்கீதத்தை முறையோடு கற்றுக்கொள்ளாத இங்கீதம் நிறைந்த இனிமைகளை அறிந்தவர்கள். வாயில் வரும் வார்த்தைகளை தளமறிந்திடாது,
தாளங்களை தவறவிடாது பாடும் தரமிக்கவர்கள். பண்ணைப்புரம் என்ற பூமி மாதாவைக் குளிரச் செய்ய வந்த கானமேகங்கள், ராகதீபங்கள், அங்கு வாழவந்த பாடகர்கள்.
இங்கே வாழவந்த வர்ணராகங்கள், பண்பாளர்கள் பண்ணிசைக்கும் புறம் அதனால் தான் பண்ணைப்புரம் என்று பெயர் வந்தது.
-பத்மாவதி
-
29th September 2012 10:34 AM
# ADS
Circuit advertisement
-
29th September 2012, 10:35 AM
#2
Senior Member
Senior Hubber
பண்ணைப்புரம்
அரங்க நாத சுவாமி சுயம்புவராகத் தோன்றி
பூத நாராயணராகக் காட்சி தந்து நின்று காத்து வந்த பூமிதான்
இசை அரங்கங்களில் நிலையான இடங்களிலிருக்கும் இளையராஜாவின் பிறந்த மண்ணாகும்.
இவன் பிறந்து வளர்ந்த மண்ணின் மகத்துவங்களையும் குண நலன்களையும் அதன் வளங்களையும்
விரிவு படுத்திக்கொண்டே போகலாம், அத்தனை சிறப்பு அம்சங்களுண்டு அந்த மண்ணுக்கு.
பூமிக்கு சிறப்பு அம்சங்கள் இல்லாத போது, பூர்வீகம் பெருமைகளை சேர்த்திட இயலாது. புண்ணியங்களும் சேர்வதில்லை.
நாம் இருக்கின்ற இடம் அங்கே வாழ்பவர்களுடைய நிலைமைகளை தெளிவுடன் காட்டிவிடும்.
மண்ணின் பெருமைகளை பெரிய விஷயங்களாக எண்ணி வாழ்ந்து வருகின்ற இளையராஜாவின் பிறந்த மண்ணான பண்ணைப்புரத்தைப் பற்றி
வெளியிடுவதை பெரும் புண்ணியமாகவே நம்புகிறேன்.
இயற்கையின் வளங்களோடு இசை உருவான மண்ணுக்குள் பற்பல மகத்தான விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன.
அவை அனைத்துமே வெளியிலே வராத நிலையில் பூதம் காத்த புதையலைப் போலவே இப்போதும் இருக்கின்றன.
அவைகளிலிருந்து சிலவற்றையாவது எடுத்து, பூமிக்கு புடம் போட்ட தங்கங்களாக்கி தருவதற்கு முயன்று இருக்கின்றேன்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் உண்மைகள் நிலைபெற வேண்டும்.
உண்மைகள் எங்கிருந்தாலும் அது ஜீவனுடந்தான் இருக்கும்.
உயிருள்ள விஷயங்களைத் தொடுகின்ற கரங்கள் வலுவடையுமே தவிர சோர்வடையாது.
உண்மையின் கரங்களைப் பிடித்துக்கொண்டு இசையின் வாழ்க்கையுடன் கலந்திட, அறிந்திட என்னுடன் வாருங்கள் இசை பெருமையடையட்டும்.
பண்ணைப்புரம் என்ற பெயர் வரக் காரணமானதைப் பார்க்கலாம் என்னுடன் வாருங்கள் பண்ணைப்புரத்திற்கு.
-பத்மாவதி
-
29th September 2012, 10:35 AM
#3
Senior Member
Senior Hubber
சின்னத்தாயின் பெரிய ஆசை
எவரிடத்திலிருந்தும் எதையுமே எதிர் பார்த்து வாழ்ந்திடாத சின்னத்தாய், தன் கணவரான ராமசாமி டேனியல் உயிருடன் இருந்த போது அவருடன் வாழ்ந்த போது,
பண்ணைப்புரம் என்ற சிறிய கிராமத்தில் ஒரு செல்வ சீமாட்டியாகவேதான் வாழ்ந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவறேயானாலும், கங்காணி ராமசாமியின் மனைவி
என்ற அந்தஸ்துகளுடன் வாழ்ந்த இவர் தர்மதாயாகவேதான் இருந்தார். விருந்திடாத சாப்பாடு இவருக்கு மருந்தாகவே தான் இருந்தன. புருஷன் என்ற அந்தஸ்து இவரை விட்டுப்போனபின்
இந்த சின்னத்தாய் பெரிய மனதோடு சின்னஞ்சிறு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு படாத கஷ்டங்களும் இல்லை, படாத பாடுகளும் கிடையாது. பிரசவங்கள் பார்ப்பார், பணியாரம் சுட்டு
விற்ப்பார், பருத்தி எடுக்க போவார், விறகு எடுக்கச் செல்வார், கடலை எடுக்கச் செல்வார். இவர் பார்த்திடாத கூலிவேலைகள் கிடையாது. தன்னை வருத்தி உழைத்து அந்த உழைப்பில்
வந்த வருவாயில், தான் பெத்த பிள்ளைகளுடைய பசிகளைப் போக்கினார். போக்கினார் என்பதைவிட பிள்ளைகளுடைய பசிக்குள் வாழ்ந்தார் என்பதே பொருந்தும்.
தன் கணவன் இறந்தபின்பு தன்னை அலங்கரித்து கொள்ளாமல், தான் பெற்ற பிள்ளைகளுடைய எதிர்காலங்களையே எண்ணிக்கொண்டு, அடமானங்களில் இருந்த சொத்துக்கள்
எதையுமே விற்று வாழ எண்ணிடாது, தன் பிள்ளைகள்தான் தனது சொத்து, சுகம் , அந்தஸ்து எல்லாமே என்று வாழ்ந்த சின்னத்தாய், சிறிதும் மனம்தளர்ந்திடாமல், பிறரிடத்தில் தன்
பிள்ளைகளை உதவி பெறவிடாமல், உத்தம குணம் நிறைந்தவர்களாக, உழைத்து வாழவேண்டும் என்ற உணர்வுகளை ஊட்டி வளர்த்தார் தன் பிள்ளைகளுக்கு.
பிறரை வஞ்சித்து வாழவேண்டும் என்ற எண்ணமில்லாமல் வாழ்ந்ததனால் தான் அவருடைய மகன் இளையராஜா திரை படங்கள் மூலம் பெரும் செல்வாக்குகளை காணும்படி காலங்கள் உதவியது சின்னத்தாயம்மாளுக்கு.
இசைப்பணி மூலம் இளையராஜா சினிமாவில் நுழைந்துபின் அத்தனை செல்வங்களும் இளையராஜாவின் இல்லம் தேடி நாடி வந்து குவிந்தன. கார், பங்களா, பட்டுப்பட்டாடைகள்,முத்துக்கள், பவளங்கள்,
வைரங்கள் இவனின் வாசல் தேடி வந்து குவிந்துகொண்டே தான் இருந்தன.அள்ளிச் செருகிய கொண்டை, வளர்த்த காது, பின்னால் கொசுகமுடைய சேலைக்கட்டு இதிலிருந்து மாறிடாமல், எதிலுமே
ஆசை இல்லாத தாய் இந்த இசை ஞானியின் சின்னத்தாய். எந்த ஒரு ஆசையுமே இவள் தன் மகனிடம் விரும்பி கேட்டு நாங்கள் பார்த்ததில்லை. இந்த தாயின் ஆசைகள் எல்லாமே தன்
மகனுடைய சந்தோசங்களுக்குள்ளும், ஆரோக்கியங்களுக்குள்ளும், அமைதிகளுக்குள்ளும் இருந்ததே தவிர, வேறெதிலும் இல்லை, இது நான் பார்த்த உண்மைகள்.
எல்லாச் செல்வங்களுமே இசை மேதைக்கு இசை இட்ட பிச்சையே, இதில் எதிலுமே இச்சைகள் இல்லாத தாயை இறைவன் இவனுக்கு இட்ட பூர்வ புண்ணிய பயன்களே தான்.
தான் பெத்த பிள்ளைகளை தன்னுடைய சொத்துக்களாக நம்பி வாழ்ந்த இந்த சின்னத்தாய் அவர்களுக்கு பெரிய ஆழமான ஆசை, ஒரு முறை எங்கள் அண்ணனின் தெவசம்
பண்ணைப்புரத்தில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அவர் என்னிடம் அவரது ஆசையை வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை தன் மகன் இளையராஜாவைப் பற்றியதுதான்.
ஏம்மா!நீ இந்த இளையராஜாவைப் பற்றி ஏன் எழுதக்கூடாது? என்றார். அதற்க்கு நான்,ஏனம்மா நான் அவனைப் பற்றி எழுதனும்னு கேட்டேன்?. அதற்க்கு அவர்கள் என்னிடம் சொன்னது,
"உன்னை எழுதச் சொல்லவில்லை, நான் எம்புள்ளைக்கு எழுதனும்னு ஆசைபடுற விஷயத்தை உன் மூலமாக எழுத ஆசைபடுறேம்மா. நான் சொல்லச் சொல்ல நீ எழுதும்மா" என்றார்கள்.
அம்மா அவர்கள் என்னிடத்தில் இப்படிக் கேட்டதும், நான் "என்னங்கம்மா இப்பிடி கேக்குறீங்க? இளையராஜாவைப் பற்றி பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாரும் எழுறாங்க.
இதுல நான் என்னத்தம்மா எழுதுறது?" என்றேன். அதற்க்கு அம்மா, "நான் எழுத படிக்கத் தெரியாதவள், எனக்கு என்ன தெரியும்? எனக்கு தெரிஞ்சது எல்லாமே எம் புள்ளதாம்மா.
எழுதும் எழுத்துக்கள் எல்லாமே இளையராஜாவின் உண்மையான வாழ்க்கையில் நடந்த சத்தியங்கலாகிவிடுமா? எனக்கு தானம்மா தெரியும், எம் புள்ளைய பத்தியும் அவன் வாழ்க்கையில்,
இசைப்படிகளில் முன்னேற எத்தனை பேர்கள் ஏணிப்படிகளாய் இருந்தார்கள் என்றும்.இந்த இளையராஜாவைப் பற்றி நான் சொல்வதால் , நடந்த உண்மைகளைப் படிப்பவர்களால்
இவனைப்போல் வாழ்க்கையில் வாழ்ந்திட முடியும். இந்த மகனைப்போல ஓய்வுகளை விரும்பிடாமல் உழைக்க முடியும். இவனைப் போல தன்னை பெற்ற தாயை தன்னுடைய
பார்வையிலிருந்து விலகிடாமல் அருகிலிருந்து கவனிக்க முடியும். தன் ரத்த பந்த உறவுகளை தன் உழைப்பால் காத்திட முடியும்.உதவிகளை பெற்று வளமான வாழ்க்கை
என் மகனால் வாழ்பவர்கள் வசை பாடினாலும், அதை பொருள்படுத்திடாமல் தன் உழைப்பால் தன் உறவுகளுக்கு மறுபடி மறுபடி உதவிட முடியும். நண்பர்கள் கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு
பணத்தை எதிர் பார்த்திராமல் தன் உழைப்பின் மூலம் வெற்றி கிட்டும்படி இசையின் மூலம் உதவிட முடியும். பிறரிடம் எதிர் பார்த்திராமல் வாழ்ந்து காட்ட முடியும். உண்மைகளைப் படிப்பவர்கள்
இந்த இளையராஜாவைப் போல ஆயிரம் ஆயிரம் ராஜாக்கள் வளரலாம், வரலாம், இவனைப் போல வாழலாம்.
அதனால் நான் சொல்வதை எழுது
உண்மையை எழுது
உள்ளதை உள்ளபடி எழுது
நீ எழுதுகின்ற எழுத்துக்களில் உண்மை இருக்குமானால் அதை அழிக்கின்ற சக்திகளை
இறைவன் யாருக்குமே வழங்கிடவில்லை. வழங்கிடவும் மாட்டான்.
பாராட்டு பெறவேண்டும் என்ற நோக்கமில்லாது, இவை பதிவாகி பல மக்களுக்கு பயன்பெறவேண்டும் என்ற நோக்குடன் எழுது.
உனது பார்வையில் பட்டதை எழுது.
நல்ல விஷயங்களை எழுது
இதைப் படிப்பவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கிட வேண்டாம். இளையராஜாவின் வாழ்க்கையை பின்பற்றி அவர்களுடைய வாழ்க்கையில்
வாழ்ந்து காட்டினாலே போதும்.
தொழில் எதுவாக இருந்தாலும், அதில் சாதித்து காட்டலாம். தாய் மனம் பூரிப்படையும்.
சாதிப்பதற்கு வயது தேவை இல்லை.
உழைக்கின்ற தொழிலில் உண்மையுடன் ஓய்வின்றி உழைத்தால் போதும்.
என்னை பெற்ற என் தாய் சின்னத்தாயம்மாளிற்கு பணத்தின் மீதோ புகழின் மீதோ
பகட்டான வாழ்க்கையின் மீதோ ஆசைகள் இல்லாதவர்கள். இந்த பணியை நீ செய்ய
உனக்கு காசோ பணமோ தேவை இல்லை. பலன்களை எதிர் பாராமல் இதைச் செய் என்று ஆசைப்பட்டார்கள்.
இசை மேதையின் தாய் அவருடைய ஆத்மதிருப்த்திக்காகவும், எனது மன தூண்டுதலின் பேரிலும்
அம்மா அவர்களுடைய ஆசியோடு, எனது பிறப்பின் உரிமைக்குரலுடன், இப்பிறப்பின் கடமை உணர்வுடன்,
பாசப்பினைப்போடும் தொடர்கின்றேன்.
காலங்கள் வரவேர்க்கட்டும்
கானங்கள் பெருமையடையட்டும்
நாளைய மலரும் நாட்களில்
நன்மைகளும் நல்ல செயல்களும் சேர்ந்துகொண்டு
நல்ல உள்ளங்களுக்கு நன்மைகள் செய்யட்டும்
படித்தபின் வாழ்த்துங்கள்
தொடர்ந்து வளரும் என் எழுத்துக்கள்
இளையராஜாவின் சகோதரி
-
29th September 2012, 10:36 AM
#4
Senior Member
Senior Hubber
இந்த இளையராஜாவைப் பற்றி இவனை ஈன்ற தாய் கூறியது,
நான் பெற்ற மகன் இசையை மட்டுந்தான் இப்போது உணர்ந்திருப்பான்,
இவனைப் பற்றி முழுமையாக இவனுக்கே தெரியாது என்று சின்னத்தாயம்மாள் அவர்களே என்னிடம் கூறினார்கள்.
அம்மான்னா சும்மா இல்லடா....
அவ இல்லேனா யாரும் இல்லடா...
உண்மையில் இந்த இளையராஜாவிற்கு சின்னத்தாயம்மாள் அந்த சாமிக்கும் மேலதான். தாயைவிட இந்த உலகத்தில் உயர்ந்தது எதுவும் இல்லை என்று உயர்ந்த இடத்தில் தன்னை பெத்தவளை வைத்திருப்பவன் இந்த இளையராஜா. இவன் தன் தாயின் மேல் வைத்திருக்கும் இத்தகைய பாசத்திற்கு அவனது தாய் எந்த அளவிற்கு அவன்மீது பாசத்தை காட்டி இருப்பாள் என்று என்னால் உணர முடிகிறது. அதனால்தான் என்னவோ சின்னத்தாயம்மாளின் அத்தனை புண்ணியங்களும், ஆசிர்வாதங்களும் இவனின்மீது தங்குதடையின்றி முழுமையாக விழுந்து கொண்டே இருக்கின்றது.
-
29th September 2012, 10:37 AM
#5
Senior Member
Senior Hubber
பரம ரசிகை
இசையின் வாழ்க்கையில் இளையராஜாவைப் பற்றி நான் தொடர்வதற்கான காரணமே
என்னை பெற்ற தாய்தான்.
இதற்க்கான காரணம் அம்மாவின் ஆசை மட்டுமே கிடையாது எனது ஆசையும்தான்.
இளையராஜாவின் இசை படைப்புகளை ஆரம்ப காலத்திலிருந்தே கேட்டு அதில் மயங்கியவள் என்ற உரிமையுடன்,
இவனுடைய குழந்தை பருவத்திலிருந்து இவனின் அழகை அணு அணுவாக ரசித்து, நடை பயில்வதிளிருந்து,
சாப்பிடும் உணவிலிருந்து,உடுத்தும் உடைகளிலிருந்து, பேசும் மொழிகளிலிருந்து, பாடும் பாடல்கள் வரையில்
ரசித்து அந்த ரசனைகளில் மகிழ்ந்து,மகிழ்வை அனுபவித்து ரசித்த பரம ரசிகை நான். இப்போது 73 வயதானாலும், இப்போதும் எப்போதும் ரசிகைதான்.
பழமையின் நினைவுகளிலிருந்து மீழ முடியாத ரசிகை என்பதனால் இவனைப் பற்றி எழுதவேண்டும் என்று ஆசை பட்டேன். எழுதுகிறேன்.
-
29th September 2012, 10:38 AM
#6
Senior Member
Senior Hubber
இசையின் வாழ்க்கை - ஒரு பார்வை
ஒரு மனிதனாகப் பிறந்தவன் தான் பிறந்த நாட்டுக்கும்,
அவன் பிறந்த வீட்டுக்கும், தன்னை பெற்றவர்களுக்கும், வளர்ந்து வந்த சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கும்படி வாழ்ந்தவனாக இருந்திருப்பான் என்றால் ,
அப்படிப் பட்ட மனிதனை வரவேற்ற மண் எத்தகைய சிறப்புடையதாக இருக்கும் என்றும்,
அப்படிப் பட்டவனை வரவேற்ற இயற்கையின் வளங்கள் எத்தகைய செழிமை நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பதையும்,
சிறப்புகள் நிறைந்த குணங்கள் நிறைந்தவனை காலங்கள் எவ்வாறு உறவுகளுடன் ஒற்றுமைகளை எடுத்துக்காட்டாக செயல்பட உதவியது என்பதையும்,
இப்படிப் பட்டவனுக்கு உயிர் கொடுப்பதற்கு காரணமான முன்னோர்களின் பூர்வ ஜென்ம புண்ணிய பலாபலன்கள் அனைத்தையும் ஆராய்ந்து,
எனக்குத் தெரிந்த எனது தம்பியின் வாழ்க்கை நிகழ்வுகளை, நீங்களும் படித்து பயன்பெற வேண்டும் என்ற நம்பிக்கையோடு இந்த
இசையின் வாழ்க்கையை
உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
இதில் இடம்பெறும் அணைத்து நிகழ்வுகளும் எனது கண்பார்வையில் நான் பார்த்தவைகள் மற்றும் உணர்ந்தவைகள்.
- பத்மாவதி
-
29th September 2012, 10:40 AM
#7
Senior Member
Senior Hubber
தெய்வங்கள் சிறப்போடு சீர்தூக்கி பார்த்தால் என்ன?
சிறப்பான புகழுடனே செல்வங்களோடு வாழ்ந்தால் என்ன?
பத்து மாத பந்தத்திர்க்காக பாசம் செய்த தொண்டு என்ன?
என்ற கேள்விக்குள்ளானதால் இந்த தொண்டை பாச உணர்வுடன்
என் தாய் சின்னத்தாயம்மாள் அவர்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.
-பத்மாவதி
-
29th September 2012, 12:19 PM
#8
Senior Member
Senior Hubber
கொடுப்பினை வேண்டும்
இசைக்கும் பிறப்பெடுக்க வேண்டும்
இனிமைகள் வேண்டும்
உணர்வுகள் கலந்துருக வேண்டும்
ஜீவனோடு வேண்டும்
ஜீவிதம் பாடலாக வேண்டும் ...
இப்பிறப்பில் பிறந்த இளையராஜா என்ற இசையின் ஆதிக்கத்திற்கு ஆணிவேர் பூர்வீகம்தான். பூர்வீக ஜென்மங்களை பலப்படுத்த வந்தவன் இந்த இளையராஜா என்று நான் நம்புகிறேன். ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கும் என்று சொல்வார்கள். இந்த மனித வாழ்க்கையில் தொடர்புகள்தான் இருக்கின்றன, முடிவைக் காணவே "முடியவில்லை". ஏழு சுரங்களில் இருந்து உதயமாகி வெளியான ராகம் போலவே, இந்த பூமிக்கு வரக் காரணமானவர்கள் இளையராஜாவின் தந்தையை பெற்றவரான வாத்தியார் முனியாண்டி என்பவர். இவர்களுடைய பாரம்பரியங்கள் வாழ்ந்த பூமி, சிவகங்கையின் அருகாமையில் உள்ள சூரங்குடி என்ற கிராமம் ஆகும். இது இளையராஜாவிற்கு தெரிய ஞாயமில்லை. இவன் வம்ச வழி வாத்தியார் வம்சமாகும். இவனுடைய மூதாதியர்கள், ஐந்தாறு தலைமுறைகளாகவே, வாத்தியார் வேலைகளை தொழிலாக கொண்டு சூரங்குடியில் வாழ்ந்ததனால் வம்சம் வாத்தியார் வம்சமானது. சூரங்குடியில் வாத்தியாருடைய தாத்தாவான தந்தையின் தந்தை (ஐந்து தலைமுறைகளுக்கு முன்), ஆதி திராவிடர்களோடு தொடர்பு கொண்டு, ஒரு பெண்ணை காதலித்து கைவிட மனமின்றி, ஜாதியின் வேறுபாட்டின் பிடியில் சிக்கிடாமல், தன் சேர்வை குலத்தை விட்டு விலகி வந்து, பண்ணைப்புரத்தில் வந்து வாழ்ந்து, தான் பிறந்த குலத்தை வெளியில் காட்டிடாது, பெண் வழியான, ஆதி திராவிடர்களுடனே ஐக்கியமாகி, வாரிசுகளை பெற்று வளர்த்தார்கள். புதுக்கதை அல்ல பூர்வீகத்தின் தொடர் இது. இதை என்னிடத்தில் கூறியவர் எனது பெரியம்மாளின் மகளான ஞான மணி என்பவர். இவர் "பொய் சொல்லாதிருப்பாயாக" என்ற இயேசுவின் பைபிள்-இன் வார்த்தையின் படி நடக்கும் இவருடைய வார்த்தைகள் சாத்தியமாகும். சூரங்குடியில் வாழ்ந்தவர்களுடைய தொடர்புகள் இருந்தன, இளையராஜாவின் தந்தை உயிருடன் இருந்த வரையில். இதன்பின் இதற்க்கான ஆதாரங்கள் என்னைத்தேடி வரவில்லை, நானும் தேடி அலையவில்லை. பல விஷயங்கள் என் இருப்பிடம் தேடி வரும் பழைய நண்பர்கள் என்னிடத்தில் அன்புடன் அணுகி கூறுவார்கள். நான் கேழ்விப்பட்ட அத்தனை விஷயங்களுமே தகுந்த ஆதாரங்களோடு காலங்கள் உதவியுடன் நிரூபித்துக்கொண்டே வருகின்றன, வளர்கின்ற
-
30th September 2012, 09:15 AM
#9
Senior Member
Senior Hubber
ஒவ்வொரு கோவில்களிலுமே ஏழை, பணக்காரர்கள், இருப்பவர் இல்லாதார், பல்வேறுபட்ட இனக்கோட்பாடுகளுடன் குருக்கள் முதல்கொண்டு வேறுபாட்டை காட்டி விலக்கிவைத்து ஒதுக்கியேதான் பூஜையே செய்கின்றார்கள். அப்படிப் பட்ட கோவில்களைத் தேடி தெய்வங்கள் வருகின்றதோ, இல்லையோ , ஆனால் இளையராஜாவின் இல்லத்தில் இருக்கின்ற உள்ளங்கள் நிறைந்த ஒற்றுமைகளைக் கண்ட முப்பெரும் தேவிகளும் சேர்ந்து வந்து, கொலுவில் அமர்ந்து உணவருந்திவிட்டு வாழ்த்தியதுபோல் ஓர் உள்ளுணர்வு எனக்குள் ஏற்படுகின்றன. கதையோ,கற்பனைகளோ அல்ல. கண்ணால் கண்டு அன்றாடம் அனுபவித்த உண்மை சம்பவம். நான் பார்த்த உண்மை. இளையராஜாவின் இல்லத்தில் இந்து மதத்தின் கொலு நடக்கும். இந்த கொலுவின் விசேஷங்களில் குடும்பம் குடும்பமாக வந்து ஜாதி வேறுபாட்டைக் காட்டி முகம் சுழித்திடாமல், மதத்தின் கோட்பாட்டைக் காட்டி விலகி நின்றிடாமல், வீட்டில் நடக்கின்ற கொலு வேலைகளை தங்களின் வேலை என எண்ணி கோலங்களிடுவதும், வீடுகளை பூக்களால் அலங்காரம் செய்து, மாவிலை, வாழை கட்டி திருவிழாக் கோலமாக இசையின் இல்லத்தை கோவிலாக மாற்றிவிடுவார்கள் அங்கு வாழ வந்த வனிதைகள். இசை கலைஞர்களையும், மகா மேதைகளையும் அழைத்து கொலுவில் ஒன்பது நாளும் பக்தி பரவசங்களோடு பாட வைத்து பாடகர்களை பரம திருப்தியுடன் அனுப்பிவைக்கும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்! ஒற்றுமைகளுக்கும், உவமைகளுக்கும் பெயர் பெற்ற குடும்பமாகவே இருந்தது எங்கள் குடும்பம், தாய் சின்னத்தை அந்த இடத்தில் இருக்கும் வரை. இப்போதும் எந்த விதமான வேறுபாடுகளையும் பாராமல் வாரிசுகளை உருவாக்கித் தந்துகொண்டு இரு குடும்பத்தையும் ஒரு குடும்பமாக்கி ஒன்று சேர்த்து ,தாத்தா பாட்டிகலாக்கி வைத்திருக்கின்றார்கள் உறவுகளை விலகவிடாது. இங்கே இசையை பிரித்து பார்த்திட முடியாதபடி குலங்களையும், மதங்களையும் வேறு படுத்த முடியவில்லை இசை குடும்பத்தில். இதற்க்கு முன் வாத்தியார் முனியாண்டியின் குலச் சான்றிதழ் பதிவாகவில்லையே என்று யாருமே வருந்தியது கிடையாது. காரணம் தாழ்ந்தவன் என்பது துரோகிகளையும், கற்பனைத் திருடர்களையும், மற்றவர்களின் கற்பனைகளை திருடி தன்னுடையது என்று பெயர் பெருபவர்களையுந்தான் தாழ்ந்த ஜாதி குலமானவன் என்று எங்களின் தந்தை இராமசாமி டேனியல் கூறி கேழ்விப்பட்டு இருக்கிறேன். இங்கே இராமசாமி டேனியல் குடும்பத்தில் மதமோ ஜாதியோ ஒரு பொருட்டே கிடையாது. பாரதி பாடிய ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்ற வழியில் விளம்பரங்களின்றி குடத்திலிட்ட விளக்காக குடும்பங்களை வழி நடத்தி வாழ்ந்து வருகின்றோம் அனைவருமே. இது ஆரம்ப காலத்தில் பூர்வீகத்தில் ஜாதி வெறிகளால் பாதிக்கப்பட்ட மூதாதியர்களின் வாழ்க்கையில் நடந்தவைகளின் பாதிப்பினால் தான் என்று எண்ணுகிறேன். இனி இளையராஜாவின் தந்தையின் கலைப்பணியையும் அதனால் காதல் வயப்பட்டதையும் பார்ப்போம்(தொடரும்...)
-
30th September 2012, 10:03 AM
#10
Senior Member
Diamond Hubber
Originally Posted by
kameshratnam
சின்னத்தாயின் பெரிய ஆசை
எவரிடத்திலிருந்தும் எதையுமே எதிர் பார்த்து வாழ்ந்திடாத சின்னத்தாய், தன் கணவரான ராமசாமி டேனியல் உயிருடன் இருந்த போது அவருடன் வாழ்ந்த போது,
பண்ணைப்புரம் என்ற சிறிய கிராமத்தில் ஒரு செல்வ சீமாட்டியாகவேதான் வாழ்ந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவறேயானாலும், கங்காணி ராமசாமியின் மனைவி
என்ற அந்தஸ்துகளுடன் வாழ்ந்த இவர் தர்மதாயாகவேதான் இருந்தார். விருந்திடாத சாப்பாடு இவருக்கு மருந்தாகவே தான் இருந்தன.
??
Bookmarks