From This weeks Anandha Vikatan..
திரைப்படங்களில் பாட ஆரம்பித்து குறைந்த காலத்திலேயே கன்னடத்திலும் மலையாளத்திலும் ஒரு வெற்றிப்பாடகியாக மாறினார் எஸ்.ஜானகி. ஆனால், தமிழில் அவரது இசைவாழ்க்கை எளிதாக உச்சத்துக்குச் செல்லவில்லை. பற்பல வெற்றிப் பாடல்களுக்குப் பின்னரும் அவ்வப்போது சில பாடல்கள் மட்டுமே அவருக்கு இங்கு கிடைத்தன. ஆனால், அவற்றில் அபூர்வமான பல பாடல்கள் இருந்தன.
ஜானகியைத் தமிழின் முதன்மைப் பாடகியாக மாற்றியது இளையராஜாவின் பாடல்கள்தான். இளையராஜாவின் கற்பனைவீச்சைத் தன் குரலால் முற்றிலுமாக எதிர்கொண்டு வாகை சூடிய ஒரே பாடகி ஜானகிதான் என்றே சொல்வேன். அவற்றில் நாட்டுப்புறப் பெண்களுக்கு உரிய குழைவும் தளுக்கும் கச்சிதமாகக் கலந்த எத்தனையோ அற்புதமான பாடல்கள் உண்டு. 'அன்னக்கிளி உன்னத் தேடுதே’, மற்றும் 'மச்சானப் பார்த்தீங்களா’ பாடல்கள் தமிழ்த் திரை இசை யின் திருப்புமுனைகள். 'ராசாவே உன்ன நம்பி’ (முதல்மரியாதை) முதல் 'இஞ்சி இடுப்பழகா’ (தேவர்மகன்) வரை அத்தகைய எத்தனையோ பாடல்கள் உள்ளம் உருகச் செய்துகொண்டே இருந்தன.
இளையராஜா தமிழுக்கு அறிமுகப்படுத்திய நுட்பமான மேலையிசை மெட்டுக்களை அவற்றின் அழகையும் இயல்பையும் பலமடங்காக்கிப் பாடிப் புகழ்பெற வைத்ததில் ஜானகியின் பங்கு மிக முக்கியமானது. 'பருவமே புதிய பாடல் பாடு’ (நெஞ்சத்தைக் கிள்ளாதே), 'பாடவா உன் பாடலை’ (நான் பாடும் பாடல்), 'இது ஒரு நிலாக் காலம்’ (டிக் டிக் டிக்), 'ஓகோ... மேகம் வந்ததோ’(மௌன ராகம்), 'ஒரு பூங்காவனம்’ (அக்னி நட்சத்திரம்), 'இரவு நிலவு’ (அஞ்சலி), 'கண்மணி அன்போடு’ (குணா), 'அன்பே வா அருகிலே’ (கிளிப்பேச்சு கேட்க வா) என்று எத்தனையோ பாடல்களைச் சொல்லலாம்.