திரு. சீனு ராமசாமி,
.
நட்பு பாராட்டுவதும், பகைமை பேணுவதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. நண்பர்களாக இருந்த இருவர், திடீரென்று பிரிந்து போனால், அவர்களில் யாராவது ஒருவர் கேட்டுக் கொண்டால் ஒழிய, அவர்களுக்கு இடையே பஞ்சாயத்து செய்ய மூக்கை நுழைப்பது அநாகரிகம்.
.
தன்னுடைய நண்பர் யார், பகைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டு. என்ன பிரச்சனை என்ன பிரச்சனை என்று தோண்டித் துருவி, அந்த privacy க்கு உள்ளே நுழைய முற்படுவது ஒரு விதமான வன்முறை.
.
இதே திரையுலகில், தம்பதி சமேதராக இருந்து, பிறகு பிரிந்து, பின்னர் தனித்தனியாக ஜொலித்தவர்கள் இருக்கிறார்கள். திரையுலகின் நன்மைக்காக என்று கருதி, அவர்களின் அந்தரங்கத்துக்கு இடையே புகுந்து அவர்களைச் சேர்த்து வைக்க முயற்சி செய்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் நீங்கள் செய்து கொண்டிருப்பது.
.
தனக்குப் பிடித்தமில்லாதவர்களின் அண்மை வேண்டாம் என்று எல்லாவற்றிலுமிருந்து ஒதுங்கி இருப்பவரை, மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்து, எரிச்சலூட்டி, அவரிடம் இருந்து கோபமான பதில்களை வரவழைப்பதன் மூலம்,. (அவரைச் சுற்றியிருக்கும்) அனைவரும் தமிழ்நாட்டு மக்களின் அமைதிக்காகப் பாடுபடுபவர்கள் போலவும், அவர் மட்டும் சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துவராத கொடுங்கோலர் போலவும் கட்டமைக்கிற கேவலம் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
.
இவர்கள் இருவரும் இணைவதென்பது இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை அல்ல. அந்தப் பிரச்சனை தீராவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் அடுத்த வேளை சோறு சாப்பிடமாட்டார்கள் என்பதுமில்லை. அதற்கான தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது என்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள்.
.
இந்த நட்பு பாலம் கட்டுகிற வேலைக்கும், உங்கள் படத்தின் வணிகத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா என்ற கேள்விகளுக்குள் நான் போக விரும்பவில்லை. அதற்கான தரவுகளும் என்னிடம் கிடையாது. அவர் தனக்குக் கிடைக்கிற சின்னச் சின்ன வாய்ப்புகள் மூலம் தன் ரசிகர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார். அதிலே கோடிக்கணக்கிலான வருமானச் சாத்தியங்கள் எல்லாம் இல்லை. அந்தப் படங்கள் எல்லாம் பல நேரங்களில் ரிலீஸ் ஆவது கூட இல்லை. மிகச் சிறிய வட்டம் இது. Do not disturb, please.
.
ஒருவேளை, நீங்கள் இதே போல, ஏஆர்.ரகுமானைப் பாட அழைத்து & 'தல' வில்லன் ரோலில் நடிக்கக் கூப்பிட்டு, அவர்கள் இருவரும் அதை ( நியாயமான காரணங்களுக்காகப்) பணிவுடன் மறுத்து, அதற்காக நீங்கள் கோபம் கொண்டு பாரதி வரிகளை எல்லாம் மேற்கோள் காட்டி பப்ளிக்காகக் கொந்தளிக்க, இதன் காரணமாக ஏ.ஆர்.ஆர். ரகுமான் / 'தல' ரசிகர்கள் உங்கள் மீது கோபப் பட்டால், என்னாகும் என்ற கவலையுடன்
.
ஒரு இளையராஜா ரசிகன்.