-
28th December 2011, 05:30 PM
#1
Senior Member
Veteran Hubber
டியர் பம்மலார் & டியர் வாசுதேவன்,
நடிகர்சங்க விஷயத்தில் நடிகர்திலகம் தன் பதவிக்காலத்துக்குப்பின் மிகவும் மனம் புண்பட்டிருந்தார் என்பது உண்மை. அதற்கான காரணம் நடிகர்சங்க உறுப்பினர்களாலேயே ஏற்படுத்தப்பட்டதுதான்.
1971 இறுதியில் நடிகர்திலகம் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர் நடைபெற்ற சங்கக் கூட்டங்களின்போது, "நமது சங்கம் இன்னும் வாடகைக் கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. அத்துடன் சங்க உறுப்பினர்களின் சந்தாவை நம்பியே நடக்கிறது. சங்கத்துக்கு சொந்தக்கட்டிடமும், நிறந்தர வருமானம் கிடைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்ட வேண்டும்" என்று நடிகர்திலகம் பேசியபோது, மற்ற அனைவரும் "அப்படியானால் இம்முறை நீங்கள் தலைவராக இருந்து செயல்படுத்துங்கள். நாங்கள் முழு ஒத்துழைப்புத்தருகிறோம்" என்று கூற, நடிகர்திலகமும் அதனை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை செய்தபின் அவர் தலைவராகவும், மேஜர் சுந்தர்ராஜன் செயலாளராகவும், வி.கே.ராமசாமி பொருளாளராகவும், 'சோ' சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும் எல்லோராலும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகம் அமைந்ததும் சொந்தக்கட்டிடத்துக்கான ஆலோசனைகள் தீவிரமாக்கப்பட்டு, உறுப்பினர்களிடம் தொகைகள் வசூலிக்கப்பட்டதுடன், சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நட்சத்திர இரவு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நிதி வசூலிக்கப்பட்டது. சென்னையில் நடந்த பிரம்மாண்ட நட்சத்திர விழாவில் ராஜேஷ் கன்னா, மும்தாஜ், ரேகா உள்ளிட்ட வட இந்திய நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். பல்வேறு வகையிலும் திரட்டிய நிதி போதாமல் வங்கியில் கடன்பெறப்பட்டு கட்டிட வேலை நடந்தது. சங்கக்கட்டிடம் மட்டுமல்லாது, ச்ங்கத்துக்கு நிரந்த வருமானம் வரும் வகையில் ஒரு பெரிய அரங்கம் ஒன்றும் கட்டப்பட்டது. திறப்பு விழாவுக்குப்பின் அந்த அரங்கம் பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு அந்தப்பணம் சங்கத்தின் நிதியில் சேர்க்கப்பட்டது. அந்த அரங்கம் பல்வேறு திரைப்படங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், வங்கிக்கடன் முழுவதும் செலுத்தப்படாத நிலையில் நடிகர்திலம் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தபோது, மேலும் இன்னொரு பீரியட் இந்த நிர்வாகிகளே நீடிக்க வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ள, தேர்தல் நடத்தப்படாமல் இவர்களின் பதவிக்காலம் நீடித்தது.
(நடிகர்திலகத்தின் முதல் பதவிக்காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 'பாரத்' பட்டம் பெற்றதற்காகவும், இரண்டாவது பதவிக்காலத்தில் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சியைப்பிடித்து முதலமைச்சரானதற்காகவும், நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர்திலகம் தலைமையேற்று பாராட்டு விழாக்கள் நடத்தினார். முதல் விழா நடிகர் சங்கத்திலும், இரண்டாவது விழா பழைய நேரு விளையாட்டரங்கிலும் நடந்தது. இதற்கு முன் 1963-ல் எம்.ஜி.ஆர். நடிகர்சங்கத்தலைவராக இருந்தபோது, அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்கா சென்று வந்த நடிகர்திலகத்தை வரவேற்று, சென்னை விமான நிலையம் முதல் அன்னை இல்லம் வரை பிரம்மாண்ட ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார் எம்.ஜி.ஆர்.)
நடிகர்திலகத்தின் தலைமையில் நடிகர் சங்கம் செம்மையாக செயல்பட்டு வந்ததால் மீண்டும் அவரையே தலைவராக நீடிக்குமாறு எல்லோரும் கேட்டுக்கொள்ள, போட்டியின்றி தேர்ந்தெடுத்தால் ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார். ஆனால் இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் எதிர்த்துப்போட்டியிடப்போவதாக அறிவித்தது நடிகர்திலகத்துக்கு அதிர்ச்சியளித்தது. அவருக்கு போன் செய்து 'ராஜு, நீ தலைவராக விரும்பினால் என்னிடம் நேரடியாக சொல்லியிருக்கலாமே, நானே போட்டியிலிருந்து விலகிக்கொள்வேனே' என்று சொன்னதோடு தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சி திரையுலகினருக்கு அதிர்ச்சியளித்தது. பலர் நடிகர்திலகத்துக்கு ஆதரவளித்தனர். நடிகர்திலகத்தின் அன்னை இல்லத்துக்கு ஒருவர் வந்து எஸ்.எஸ்.ஆரை போட்டியிலிருந்து விலகச்செய்ய தான் பொறுப்பு என்றும், நடிகர்திலகமே சங்கத்தலைவராக நீடிக்க வேண்டுமென்றும் சொன்னார். அவர் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஐசரிவேலன்தான் அவர்.
ஆனால் நடிகர்திலகம் மறுத்துவிட்டார். 'எப்போ போட்டின்னு வந்திடுச்சோ அப்புறம் அந்தப்பதவி எனக்கு வேன்டாம், ராஜுவே தலைவராகட்டும்' என்று விலகிவிட்டார். எஸ்.எஸ்.ஆர். சங்கத்தலைவராக பதவியேற்றதும் சங்க செயல்பாடுகள் முடங்கிப்போயின. அவற்றுக்குக் காரணம் முந்தைய தலைவராக இருந்த நடிகர்திலகம், மற்றும் வி.கே.ஆர்., மேஜர் இவர்கள்தான் என்று எஸ்.எஸ்.ராஜேந்திரன் குற்றம் சாட்ட, நடிகர்திலகம் மனம் புண்பட்டு 'இனிமேல் நடிகர் சங்கத்துக்கு வரமாட்டேன்' என்று அறிக்கை விட்டார். அதிலிருந்து அவர் சங்கத்தின் பக்கமே போகாமல் இருந்தார். நடிகர்சங்கத்தின் சார்பில் இலங்கைத்தமிழர்களுக்காக நடந்த ஊர்வலத்தில் மட்டும் எஸ்.எஸ்.ஆருடன் ஒரே ஜீப்பில் அமர்ந்து வந்தார். அதுபோலவே, ராம்குமாரின் திருமண வரவேற்பு ஆபட்ஸ்பரி மண்டபத்தில் நடந்தபோது, இரவு வெகுநேரம் கழித்து தன் முதல் மனைவியுடன் கடுகடுவென்ற முகத்துடன் எஸ்.எஸ்.ஆர். வந்துவிட்டுப்போனார்.
பின்னர் ராதாரவி நடிகர்சங்கத் தலைவரான பின் முதல் வேலையாக அன்னை இல்லம் சென்று, 'இனிமேல் நீங்கள் கண்டிப்பாக சங்க நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டும்' என்று நடிகர்திலகத்தைக் கேட்டுக்கொள்ள, 'எனக்குப்பதிலாகத்தான் நீ இருக்கியே அப்புறம் என்ன, எங்க காலம் முடிஞ்சுபோச்சு. உன் ஃபிரண்டு பிரவனை (பிரபுவை) கலந்துக்கச்சொல்றேன். எல்லாரும் ஒற்றுமையா இருந்து செய்ங்க' என்று வாழ்த்தி அனுப்பினார்.
ஆனால் பிற்பாடு நடிகர்திலகத்தைப் பற்றி எஸ்.எஸ்.ஆர். உயர்வாகவே பேசிவந்துளார். பல விழாக்களில் 'என் அன்புச்சகோதரர் சிவாஜி கணேசன்' என்றே குறிப்பிடுவார். நடிகர்திலகம் மறைந்தபோது பெஸன்ட் நகர் மின்மயானத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இதன் உச்ச கட்டமாக, மூன்றாண்டுகளுக்கு முன் தஞ்சாவூரில் நடிகர்திலகத்தின் முழு உருவச்சிலையை எஸ்,எஸ்.ஆர்தான் திறந்து வைத்து அழியாக்கல்வெட்டில் இடம்பெற்றார்.
-
28th December 2011 05:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks