-
9th March 2008, 01:54 PM
#1
Senior Member
Diamond Hubber
sumai - +++
ஒரு மங்கலான பிற்பகல்.. !!
பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு ஏழெட்டு மலைக் கிராமங்களை இணைக்கும் அந்த பஸ்.... !!
"இந்தாம்மா... அந்த பையைக் கொஞ்சம் காலுக்குக் கீழே இறக்கி வச்சுக்கிட்டா என்னவாம் ? பக்கத்துல ஆளுங்க உக்காரத் தேவல ?"
கேட்ட பெண்மணி தன் நெற்றி முழுவதும் சந்தனம் பூசி அதன் நடுவில் ஒரு அபாய அறிவிப்பு செய்வது போன்ற சைஸில் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு, அதனால் தனக்கு ஒரு தெய்வீகக் களை இருப்பதாகவும், எல்லோரும் பயபக்தியுடன் தன்னைப் பார்ப்பதாகவும் நினைத்துக் கொண்டு பஸ்ஸில் இருந்த மற்றவர்களைப் பார்த்தார்.
அவருடைய கேள்விக்கு விடையாக ஒரு வினாடி தன் முகத்தைத் திருப்பிப் பார்த்து விட்டு தன் மடியில் இருந்த பெரிய பையை மீண்டும் கைகளால் சுற்றிப் பிடித்தபடி மேகலை ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.
"என்ன திமிரடியம்மா இந்தக் காலத்துப் பெண்களுக்கு ? பெரியவங்க, பெருந்தலைங்கன்னு ஒரு மருவாதி கொடுக்கத் தாவல ? அந்தக் காலத்துல நாங்க பெரியவங்க வந்தா எம்புட்டு கவுரதை தருவோம். இப்போ என்னடியின்னா மடியில இருக்குற பையை எறக்கி வையடியம்மா அப்படின்னு சொன்னாக் கூட கேப்பாரில்ல"
அவளுக்கு அடுத்து இருந்த கண்ணாடி போட்ட மனிதர் " பெரியம்மா.. அவங்க மடியிலே அவங்க வச்சுகிட்டு போறாங்க.. நீங்க வுட்டுத் தள்ளுங்க" என்றார்.
"இப்படி காத்து வர வழிய மறைச்சுகிட்டா நான் எப்படிங்க மூச்சு விட முடியும்?" பெரியம்மா மார்பில் கையை வைத்துக் கொண்டு மாரடைப்பு வந்தவள் போல பெருமூச்சு விட்டுக் காண்பிக்க பஸ்ஸில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.
தன்னை விளையாட்டுப் பொருளாக ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில் பெரியம்மா கையிலிருந்த ஆரஞ்சுப் பழத்தை உரிக்க ஆரம்பித்தார்.
தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் தன்னைப் பற்றி நடப்பது கூட தெரியாமல் மேகலை ஜன்னலுக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த காட்சிகளில் லயித்திருந்தாள்.
மேகலை...
"என்பு தோல் போர்த்த உடம்பு" என்று ஒரு செய்யுளில் வருமே.. அது போல
ஒரு எலும்புக் கூட்டுக்கு மேல் தோல் போர்த்தி இருப்பது போலத்தான் இருந்தாள். கழுத்தில் இருந்த கறுப்புக் கயிறு உண்மையில் மஞ்சள் கயிறு என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்பப் போவதில்லை.
-
9th March 2008 01:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks