-
5th April 2015, 09:36 AM
#1
Senior Member
Diamond Hubber
கங்கு கொஞ்சம் கூட அணையாமல் மென்மேலும் படைப்புத் திறனில் பொலிவடைந்துகொண்டிருக்கும் ராஜாவின் ருத்ரமாதேவி திரையிசைப் பாடல்களைத்தான் தற்போதைய நாட்களில் அதிகமாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். முக்கியமான கீழுள்ள மூன்றுப் பாடல்கள் இனிவரும் வாழ்க்கை முழுதும் நம் கூடவே பயணிக்கும் ஜீவிதம் பெற்றவை.
1) புன்னமி பூவ்வை - சுகாந்தமான காற்று பூக்களைச் தொட்டுச் செல்வதுபோல மெலடி மற்றும் பின்னணி. அற்புதமான ஆரம்ப இசை. ஸ்ரேயா கோஷல் குரலில் பல்லவி கேட்பதற்கு தேவாமிருதமாக இனிக்கிறது. தாய்மொழி வேறொன்றாக இருந்தாலும் ஸ்ரேயா தென்னிந்திய மொழிகளை கையாள்வது பெரியதொரு சாதனை. முதல் இடையிசையில் "சூவே சுபலாலியம்மா" எனத் தொடங்கும் கோரஸ். எப்படி ராஜாவுக்கு மட்டும் கோரஸ் உருவாக்குவதில் ஒவ்வொருமுறையும் சிகரம் தொடுகிறார் என்பது வியப்பாக இருக்கு. பாடல் முழுதுமே தந்திக்கருவி இசைகளை கோர்த்தே நெய்திருப்பது ராஜாவுக்கே உரிய முத்திரை.
2) ஔனா நீவேனா - ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. ஹரிஹரனும் சாதனாவும் சேர்ந்து பாடுவதைக் கேட்டு. இந்தப் பாடலும் சரி, முதலில் குறிப்பிட்ட புன்னமி பூவ்வை பாடலும் சரி.. ராஜா பல்லவியை கட்டமைத்த விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எல்லாரும் இப்படித்தான் ஒரு பல்லவி போகும் என நினைத்திருக்கும் பாதையை விட்டு தனியே செல்வதுதான் தான் விரும்புவது என ராஜாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். பல்லவியாக இருக்கட்டும், சரணமாக இருக்கட்டும்.. ஒவ்வொருமுறையும் ஔனா நீவேனா என்ற இடத்தை மீண்டும் தொடும் விதமே அழகு. சரணத்தில் உச்ச்சச்தாயில் சாதனா கஷ்டப்பட, ரொம்ப நிதானமாக ஹரிஹரன் அதையெல்லாம் கடந்து செல்வதைப் பார்க்கமுடிகிறது. பின்னணி இசைக்கு வழக்கம் போல பாடம் எடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். தந்திக் கருவிகள் மலைமுகடுகளில் நின்றுகொண்டிருக்கும் நம்மை தொடர்ச்சியான மேகக்கூட்டங்கள் தழுவிச் செல்வதுபோல உணரலாம். இரண்டு பாடல்களிலும் தபேலாவின் தாளக்கட்டு தாலாட்டுகிறது.
3) அந்த்டபுறம்லோ - இது கொஞ்சம் துள்ளல் நிறைந்தது முதல் இரண்டு பாடல்களை ஒப்பிடும்போது.. திரைப்படத்தில் தோழிகள் சேர்ந்து பாடுவதுபோல இருக்கலாம். சித்ரா, சாதனா, சின்மயி மூவரும் வரிகளை பகிர்ந்து பகிர்ந்து தொடர்ச்சியாக பாடியிருக்கிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பாடகர்கள் பாடும்போது, மெட்டில் ஒவ்வொருவருக்கும் இடம் ஒதுக்குவது ராஜாவுக்கு கைவந்தக் கலை. அதை இன்னொருமுறை இப்பாடலின் மூலம் உணரலாம்.
பின்னணி இசையருவிப் பாய்ச்சலில் ராஜாவிடமிருந்து தொடர்ந்து வரும் படைப்புகளில் ருத்ரமாதேவி அதற்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
5th April 2015 09:36 AM
# ADS
Circuit advertisement
Bookmarks