-
1st August 2008, 12:56 PM
#1
Senior Member
Platinum Hubber
http://ww.smashits.com/music/tamil/s...oldies-4.html#
(first song)
தண்ணிலவு தேன் இறைக்க
தாழைமரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்
நாணி நின்றாள்
நெஞ்சமதில் அலை எழும்ப
தஞ்சமலர் அடி கலங்க
அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் அங்கு
அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள்
நினைந்து நின்றாள்.
விண்ணளந்த மனமிருக்க
மண்ணளந்த அடியெடுக்க
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் ஒரு
பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்
பொட்டிருக்க பூவிருக்க
பூத்தமலர் மணமிருக்க
கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள் இரு
கண்விழியில் கவிதை கண்டு நின்றாள்
__________________________
தண்மையான அதாவது குளுமையான இரவு நேரத்திலே, இனிமையான நேரத்திலே, நிலவு தேன் இறைக்கும் நேரத்திலே, அவளின் 'தேனிலவு' நேரத்தில் (அவள் முதலாம் இரவில் புது உறவை சந்திக்கச் செல்லும் நாள்) தாழை மரம் என்றால் தாழ் விட்டிருக்கும் மரம். ஒரு பெண் குலம் வழங்க அந்த தாழை மரம் நீர் (பனி பொழிகிறது) தெளித்து (பன்னீர் தெளித்து) அவளை மணவறைக்குள் வரவேற்கிறது.. அவள் குலம் தழைத்து வளர வாழ்த்துகிறது.
இப்படிப் பட்ட சூழ்நிலையில் அந்த கன்னிப் பெண்... செல்கிறாள். எப்படிச் செல்கிறாள்? நடை பயின்று செல்கிறாள். நடந்து செல்லவில்லை. நடைபயின்று என்றால்....குழந்தை எப்படி மெதுவாய், தட்டுத் தடுமாறி, யோசித்து, தயங்கி, அடிமேல் அடி வைத்து நடக்குமோ அதற்குப் பெயர் 'நடைபயில்'தல். அப்படி நடை பயின்றபடி செல்கிறாள். சென்றவள் கணவனை / காதலனைக் கண்டு நாணி நிற்கிறாள்.
புதுமணப்பெண்ணிற்கு மனநிலை எப்படி அச்சமும், கலக்கமும், மகிழ்ச்சியும், மயக்கமும் கலந்து இருக்குமோ, அப்படியெல்லாம் அவள் மனமும் ஒவ்வொரு உணர்ச்சியில் தடுமாறுகிறது.
நெஞ்சமதில் அலை எழும்ப (இரு பொருள் கொள்ளலாம், வேறு பொருளை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை) நெஞ்சத்தில் அலை எழும்ப, எப்படிப் பட்ட அலை என்பது அவரவர் மன நிலையைப் பொருத்தது. அது பய அலையாக மயக்க அலையாக தயக்க அலையாக என பலவகைப் படலாம். நெஞ்சத்தில் ஏதேதோ எண்ண அலைகள் எழும்ப தஞ்சம் புகுந்த அந்த மலர் (மங்கை) அடி கலங்க (மெதுவாய், நடுங்க) வருக்கிறாள்.
அல்லது தஞ்ச மலரடி அதாவது தஞ்சம் புகுந்த அவளின் மலரடி (மலர் போன்ற பாதம்) கலங்க) நடந்து வருகிறாள்.
(எப்படியும் அவள், அவனிடம் தஞ்சம் புகுந்து விட்டாளாம்! )
பயந்து தயங்கி இடை துவண்டு (பயத்தால் இடை துவண்டு) வருகிறாள். இடையை இப்படியும் அப்படியுமாக (இப்படியும் அப்படியும் இருந்தால் doubtful hence பயந்து) ஆட்டி வருகிறாள் என்பது இன்னொரு பொருள். வந்தவள் தன் பயத்தைப் போக்கிக்கொள்ள அவள் காதலனின் அன்பை, காதலை, நினைந்து தன்னை சற்றே அமைதிப் படுத்தி நின்றாள்.
மனம் என்னவோ விண்ணளந்து, பறந்து, மகிழ்ந்து, சிறகடித்து, கற்பனையில் மிதக்க, அவள் கண்கள் மட்டும் மண்ணை நோக்கி தாழ்ந்திருக்கிறது. அவள் மண்ணளந்து நடக்கிறாள். மண்ணளக்க வேகமாக நடந்தால் முடியாது. அடிமேல் அடிவைத்து மெதுவாய் நடந்தால் தான் மண்ணை அளக்கமுடியும். அப்படி அவள் அடிமேல் அடிவைத்து, நடந்து, (அடி என்பது அளவுகோல் + பாதம் என்று இரு பொருள் கொள்ளலாம்) நடுங்கியபடி, பயந்து, தயங்கி வருகிறாள். அவள் பொன்னை ஒத்த மேனி, பொன்னை சரியாக அளவாக அளந்து செதுக்கிய மேனி மெல்ல நடுங்கியபடி வருகிறாள். வந்த அவள், அவளை (அவள் = பூவை) பூவையை அளந்த அவனின் முகத்தைக் கண்டு நின்றாள். பூ போன்ற அவளின் முகத்தை அளந்த அவன் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு அளப்பது என்பது எடை போடுவது. அவளை, அவள் மனக்கலக்கத்தை, பயத்தை, ஆசையை, அன்பை, அழகை எடை போடும் அவனின் முகம் கண்டு நின்றாள்.
ஒருவழியாக பலவிதமான எண்ண அலைகள் மோத அரைக்குள் நுழைந்து அவனையும் கண்டுவிட்டாள்...இனி, அந்த அறைக்குள் அவளை போட்டும் பூவும் அலங்காரங்களும் வரவேற்கின்றன.
பொட்டும் பூவமாக அவள் மெல்ல வருகிறாள் என்று வரும். அல்லது 'பூவிருக்க' என்றால் கொலுவிருக்க, வீற்றிருக்க என்று இன்னொரு பொருளும் உண்டு. எனின், அவன் பூவிருக்கிறான் (வீற்றிருக்கிறான்) . பூவைக்காக காத்திருக்கிறான் என்றும் வரும். எங்கும் அலங்காரங்கள் தொங்க, பூத்தமலர்களின் மணம் அரையெங்கும் பரவியிருக்கிறது.
பூத்த (சந்தோஷத்தில் பூத்த) அவனின் அல்லது அவளின் மணமும் சேர்கிறது. இனி பயமும் அச்சமும் விலக, மயக்கம் மேலோங்குகிறதாம். அதனால் அவள் ஒருவழியாக கட்டிலுக்கு அருகில் சென்றுவிடுகிறாள்.
அவனின் இரு கண்விழியில் காதல் எனும் கவிதை கண்டு நின்றாள்.
அவனின் இரு கண்விழியையே கவிதையாய் கண்டு நின்றாள்.
அவன் இரு கண்விழியில் தன் நிழல் ( image of hers இங்கு தன்னைக் கவிதையாய் வரித்துக் கொள்கிறாள்) கண்டு நின்றாள்.
என்று அவரவர் கற்பனைக்கேற்ப எப்படி வேண்டுமென்றாலும் பொருள் கொண்டு மகிழலாம்.
அள்வோ தான்!
-
1st August 2008 12:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks